பொள்ளாச்சி,
பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதியில் நேற்று காலை உணவு சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு வாந்தி–மயக்கம் ஏற்பட்டது.
மாணவர்விடுதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் அரசு ஆதி திராவிட நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். விடுதி காப்பாளராக நெல்லையை சேர்ந்த சிங்கபாண்டி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
23 மாணவர்களுக்குவாந்தி–மயக்கம்
இந்தநிலையில் நேற்று காலை உணவாக மாணவர்களுக்கு சாப்பாட்டுடன் சாம்பார், ரசம் வழங்கப்பட்டது. மாணவர்கள் உணவை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 23 மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மாணவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள். மாணவர்கள் மருதமுத்து, அரவிந்த், ராஜேஷ்குமார், சரத்குமார், பிரவீன், சந்தோஷ்குமார், கருப்புசாமி (உள்பட 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாரிகள்ஆய்வு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலகிருஷ்ணன், தாசில்தார் ஸ்டெல்லா ராணி ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ஜெயந்தி, அரசு வக்கீல் கிரி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் கனகராஜ், கவுன்சிலர்கள் மூசா, ஜேம்ஸ்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல் அறிந்த நகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். பின்னர் மாணவர்கள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது–
விடுதியில் காலையில் வழக்கம்போல் 7.30 மணிக்கு சாப்பாட்டுடன் சாம்பார், ரசம் சேர்த்து உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்ட உடன் சாம்பாரில் ஏதோ கலந்தது போன்று இருந்தது. உடனே சாப்பாட்டை கொட்டி விட்டு மீண்டும் சாப்பாடு வாங்கி, அதில் ரசம் ஊற்றி சாப்பிட்டோம். அதன் பிறகு காலையில் பள்ளிக்கு சென்று விட்டோம். அங்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினோம். அவர் விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்தார். விடுதி காப்பாளர் எங்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள்.