Home » DISTRICT PRESS NEWS » குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து பொது மக்களை கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம்

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து பொது மக்களை கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம்

கோரிமேடு, செப். 19–
                                                          சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக டாக்டர் அனுராதா உள்ளார். இவர் பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தி கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை கண்டுபிடித்து அழித்தார்.
வெல்லத்தில் கலப்படம் செய்வதை கண்டுபிடித்தார். சேகோ ஆலைகளுக்கு ரசாயனம் தடவிய ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை தடுத்தார். இப்படி பரபரப்பான நடவடிக்கைகளை எடுக்கும் அவருக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. முகமது ரபீக் என்பவர் எழுதி அனுப்பியதாக கூறப்பட்ட அந்த தபால் கார்டில் எழுதப்பட்டு இருப்பதாவது:–
சேலம் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் ஜீவா நகரில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதே போல் 4–வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்வோம்.
இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். ‘அனுராதா உன் னால் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால் ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும். இந்த முகமது ரபீக் பற்றி கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கண்டிப்பாக கலக்கப்படும்.
உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக எந்த இந்துக்கள் இருந்தாலும் அவர்களை உயிருடன் விடமாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும்.
கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால் 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன் தலை இருக்காது. நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இப்படிக்கு முகமது ரபீக் கே.என்.பட்டி சேலம்–8 என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து கலெக்டர் மகரபூஷ ணத்துக்கு டாக்டர் அனுராதா தகவல் தெரிவித்தார்.
இந்த கடிதம் குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆகியோரிடமும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா புகார் செய்து உள்ளார்.
மேலும் கொண்டப்பநாயக்கன்பட்டி சிற்றூராட்சி தலைவர் ஆர்.பி. பாபு இந்த மிரட்டல் கடிதம் குறித்து கன்னங் குறிச்சி போலீசில் புகார் செய்து உள்ளார்.
அந்த புகார் மனுவில் கடிதம் எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. போலீசார் அந்த மர்ம கடிதம் குறித்து விசாரித்து வருகிறார்கள். கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Leave a comment